பெண்ணும் ஆணும் இயற்கையின் படைப்பு என்பதில் எந்த அளவு உண்மை இருக்கின்றதோ, அதைப் போலவே அலிகள் என்றழைக்கப்படும் அரவாணிகளையும் இயற்கைதான் படைத்திருக்கிறது என்பதில் உண்மை இருக்கின்றது. பெண்ணும் ஆணும் கடவுளின் படைப்பு என்று நம்பிக்கை சார்ந்த ஆன்மீகத் தளத்தில் நின்று பார்த்தாலும் கூட, அரவாணிகளும் கடவுளின் படைப்புதான் என்பதில் நம்பிக்கை கொண்டாக வேண்டும். ஆக, பெண் என்பது ஒரு பாலினம்; ஆண் என்பது இன்னொரு பாலினம், அரவாணி என்பது மூன்றாம் பாலினம் எனக் கொள்ளலாம். ஆனால், சமூகத்தில் நிலவுகிற எல்லாச் சட்டகங்களுமே (Fரம்ச்) மூன்றாம் பாலினத்தை அங்கீகரிப்பதில்லை. சமூகத்தின் பொதுத் தளங்கள் யாவும் அரவாணிகளை அருவருப்பான மனநிலை சார்ந்த மக்கள் பிரிவாகவே புரிந்து கொண்டிருக்கின்றன. இன்றைய வெகுமக்கள் ஊடகங்கள் யாவும் அரவாணிகளைக் கேவலமாகத்தான் காட்டி வருகின்றன. இத்தகைய ஊடகங்களால் உருவாக்கப்படும் கருத்தியலின் விளைவுகளால் சமூகமே இவர்களை இழிவான பிறவிகளாகப் பார்த்து வருகின்றது.
அரவாணிகள் குறித்து அறிந்து கொள்ள நிறைய இருக்கின்றன. அரவாணிகள் பற்றிய தரவுகளை அவர்களே முன்மொழிகிற போதுதான் அது முழுமை கொள்ள முடியும். அவர்களிடம் கேட்டுப்பெறுகிற அல்லது பழகிப் பகிர்ந்து கொள்கிற செய்திகள் முழுமையான தரவுகளாக அமைந்திடாது. ஆயினும், அரவாணிகளைக் குறித்த முதல்நிலைப் புரிதலுக்காக சில அரவாணித் தோழர்களிடம் பெற்றுக் கொண்ட வாய்மொழித் தரவுகளை வைத்துக் கொண்டு சில புள்ளிகளைத் தொட்டுக் காட்ட முயற்சிக்கிறது இக்கட்டுரை.